இன்று தமிழுக்குச் செம்மொழி என்ற அந்தஸ்து அளிக்கப்பட்டிருக்கிறது. சென்ற நூற்றாண்டிலேயே டாக்டர்.கால்டுவெல் பாதிரியார் இதனைத் திட்டவட்டமாக ஆராய்ந்து நிறுவியுள்ளார். பழமை, சொல்வளம், திருந்திய பண்பட்ட இலக்கிய இலக்கணங்கள், பிற மொழிகளின் துணை வேண்டாத தனித் தன்மை முதலியன செம்மொழியின் பண்புகளாம். தமிழின் சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியவை. அவற்றையடுத்துத் தோன்றியவை சிலப்பதிகாரம், மணிமேகலை, பதினெண்கீழ்க்கணக்கு, முத்தொள்ளாயிரம் போன்றவை. தொல்காப்பிய இலக்கணம் இவற்றிற்கெல்லாம் பல நூற்றாண்டுகள் முந்தியதென்பர். அதற்கு முன்னும் பல இலக்கியங்கள் இருந்ததால்தான் இந்த இலக்கணம் தொன்றியிருக்க வேண்டும். கால வெள்ளத்தாலும், இயற்கைச் சீற்றத்தாலும் அழிந்தன போக எஞ்சியவையே இன்றைய இலக்கியங்கள்.
மனிதன் வாழ்க்கைப் பயனாக அடையத்தக்க பேறுகள் அறம், பொருள், இன்பம், வீடு, என்பன. இவற்றுள் வீடு இப்பிறவியொழிந்தபின் பெறத்தக்கது. மற்றவற்றில் இன்பம் என்பது மனத்தால் உணர முடியுமேயன்றிப் பிறர்க்கு எடுத்துரைக்க முடியதது. எனவே அது 'அகம்' எனப்பட்டது. மற்றவை 'புறம்' எனப்பட்டன. இவ்விரு பொருள்களையும் பெற்று வாழும் வாழ்க்கை முறையைக் கூறுவதே தொல்காப்பியத்தின் பொருளதிகாரம். இவ்வாறு பகுத்துக் கூறும் வாழ்க்கை முறை பற்றிய இலக்கணம் பிற மொழிகளில் இல்லை, தமிழுக்கேயுரிய சிறப்பு.
இனி பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை. சங்க காலத்தில் வழங்கிய அப்பாடல்களை யாரோ தொகுத்துள்ளனர். பத்துப்பாட்டு - பத்து தனித்தனிப் பாடல்கள், நூற்றுக்குமேற்பட்ட அடிகளையுடையவை; எட்டுத்தொகை - தனித்தனியான நூற்றுக்கு மேற்பட்ட பாடல்களைக் கொண்ட எட்டு நூல்கள் ; நான்கு முதல் நாற்பது, ஐம்பது அடிகள் வரை உடையவை. இவற்றில் அகப்பொருள் பற்றிய பாடல்களே அதிகம். அகப்பொருட் பாடல்களுக்கென்று சில தனிப்பட்ட இயல்புகள் உண்டு:
(1) இவற்றில் வரும் மக்கள் இயற்பெயர்களால் கூறப்படுவதில்லை ; வெற்பன், ஊரன், தோழி, பாங்கன், நற்றாய் முதலிய பெயர்களால் தான் கூறப்படுவர். இக்காலத்திலும், "கதைகளில் வரும் பெயர்கள், சம்பவங்கள் யாரையும் குறிப்பிடுவன அல்ல; கற்பனையே" என்று இதழ்களின் ஆசரியிர்கள் குறிப்பிடுவதைக் காணலாம்.
(2) பாடல்களுக்குத் திணை, துறை முதலிய குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும். அவை அப்பாடலின் பொருளை அறிய ஓரளவு உதவும்.
(3) பாடல்கள் பெரும்பாலும் ஆசிரியப்பாக்களே. ப்தினெண்கீழ்க்கணக்கு போன்ர்றவை வெண்பாக்களானவை.
(4) சில புலவர்கள் தம் பாடலில் குறிப்பிடும் சில நிகழ்ச்சிகள், உவமைகள் போன்றவை அக்கால வரலாற்றை அறிய உதவுகின்றன.
(5) சங்க நூல்களில் கற்பனைகள் உண்டு. ஆனால் அவை வரம்பு மீறிய உயர்வு நவிற்சிகளாக மாறுவதில்லை.
இனி, ஒரு சில சங்கச் செய்யுட்களின் இன்பத்தை நுகர்வோம்.
Saturday, July 4, 2009
தமிழ் இலக்கிய இன்பம் (சு. இராசகோபாலன்)
Labels:
literature,
sanga,
tamil,
இலக்கியம்,
எட்டுத்தொகை,
தமிழ்,
பத்துப்பாட்டு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment