இப்பொழுது திப்புத்தோளார் என்ற புலவர் பாடிய செய்யுள் ஒன்றைக் காண்போம். இப்புலவர் பெயர் தீப்புத்தேளார் என்றும் சில பிரதிகளில் காணப்படுகிறது. தீப்புத்தேள் என்பது அக்கினி தேவனைக் குறிக்கும். இக்காலத்திலும் சிலர் தம் குழந்தைகளுக்கு அக்கினீசுவரன், அக்கினீஷ் என்று பெயரிடுவதைக் காண்கிறோம்.
நாம் ஒருவரைக் காணச் செல்லும்போது, வெறுங்கையுடன் செல்வதில்லை. ஏதேனும் பரிசுப்பொருளோ, பழம் அல்லது தின்பண்டங்களோ வாங்கிச்செல்வது வழக்கமல்லவா? அதுபோல் அக்காலத்தில் தலைவன் தலைவியைக் காணச் செல்லும்போது மலர் அல்லது தழையைக் கையுறையாகக் கொண்டு செல்வது வழக்கம். அதைத் தோழி மூலம் தலைவியிடம் சேர்த்து அவளைக் காண்பான். இதற்குக் 'கையுறையளித்தல்' என்று பெயர். தோழி அதனை ஏற்கவும் செய்யலாம், மறுக்கவும் செய்யலாம். அவ்வாறு ஒரு தோழி தலைவன் தந்த கையுறையை மறுத்த செய்தியே திப்புத்தோளாரது இச்செய்யுளில் கூறப்படுகிறது.
முருகப் பெருமான் சூரன் முதலிய அரக்கர்களைக் கொன்று அழித்த வரலாறு யாவரும் அறிந்ததே. அவ்வாறு அவன் அழித்த போர்க்களம் முழுதும் இரத்தவெள்ளத்தால் செந்நிறக்களமாகியது. அம்முருகன் கையிலிருந்த அம்பும் அரக்கர் உடலைத் துளைத்து ஊடுறுவியதால் செந்நிறத் தோற்றம் பெற்றது. அது மட்டுமா! அம்முருகன் ஊர்ந்து வந்த யானையும் கொம்புகளால் (தந்தங்களால்) பகைவனைக் குத்திக் கொன்றதால், அதன் தந்தங்களும் குருதி படிந்து விளங்கின. ஏன்? அம்முருகனேகூடச் செந்நிற வாய்ந்த தோற்றங்கொண்டவன் என்பதால்தானே 'சேயோன்' என்றழைக்கப்படுகிறான்! அம்முருகன் வாழும் மலையும் செங்காந்தள் மலர்கள் நிறைந்திருப்பதால், குருதி படிந்தது போல் தோன்றுகின்றது.
இத்தகைய மலையில் வாழும் தலைவியைக் காணத்தான் தலைவன் வந்தான். அவன் கையுறயாக ஒரு செங்காந்தள் மலர் கொண்டு வந்து தோழியிடம் தந்தான். அவளோ அதனை ஏற்றுக் கொள்ளாமல் பின்வருமாறு மறுத்துக் கூறினாள்:
"அரக்கர்களைக் கொன்று போர்க்களத்தையே செங்களமாக்கிய முருகன் வாழும் குன்று இது. அவன் கையிலிருப்பதும் செங்கோலம்பு. அவன் ஊர்தியும் செங்கோட்டு யானை. ஏன்? அவனே சேயோன் தானே! இவ்வாறு எங்கும் செந்நிறமாக விளங்கும் மலையில் வாழும் எங்களுக்கு நீ செங்காந்தள்மலரைத் தருகிறாயே! எங்கள் ம்லையெங்கும் செங்காந்தள் மலர்கள் குலைகுலையாகப் பூத்திருப்பதைப் பார்" என்று கூறிக் கையுறை மறுத்தாள்.
இதனை விளக்கும் செய்யுள் இதோ:
"செங்களம் படக்கொன்று அவுணர்த்
தேய்த்தசெங்கோல் அம்பின் செங்கோட்டு
யானைக்கழல்தொடிச் சேஎய்
குன்றம்குருதிப் பூவின் குலைக்காந் தட்டே"
[அவுணர் - அரக்கர்;
செங்கொடு - தந்தம்;
கழல்தொடி - முருகன் காலிலும் கையிலும் அணிந்திருந்த அணிகள்;
காந்தட்டே - காந்தள் பூக்களை உடையது]
தீப்புத்தேளார் (புத்தேள் - தேவர்) தம் பெயருக்கேற்ப செய்யுள் முழுதும் அச்சந்தரும் செம்மை நிறந் தோன்றக் கூறியிருப்பதைக் காணலாம்.
Saturday, July 4, 2009
Subscribe to:
Post Comments (Atom)
நன்றாய் விளக்கியுள்ளீர் தோழரே...
ReplyDeleteஇந்தப் பாடலில் நான் இரசித்து மகிழிந்த ஒரு பொருள், தோழியின் குசும்பு (குறும்பும்). தலைவனின் கையுறையை மறுக்கத் துணிந்தவள் களம், கோல், யானையின் கோடு, குன்றம் என எல்லாவற்றுக்கும் “செம்” (சிவப்பு) என்ற அடை தந்துவிட்டு, இயல்பிலேயே சிவப்பான காந்தளை கூறுகையில் “குருதிப் பூ” என்று மறைமுகமாய் அதன் சிவப்பை குறிப்பிட்டு தலைவனின் கையுறையை இழிவு படுத்துகிறாள்! என்னே ஒரு குசும்பு! :)
அன்புடன்,
வி