Wednesday, July 15, 2009

5. இனிப்பும் உவர்ப்பும்

'பாட்டி சொல்லைத் தட்டாதே' என்பதொரு திரைப்படம். ஆம்! எங்கள் பாட்டி கூறிய ஒரு கிராமத்துக்கதையைத் தட்டாமல் இங்கு குறிப்பிடுகிறேன்.

ஒரு கணவன் மனைவி; புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள்; ஒருவர் மீதொருவர் அளவற்ற காதலுடையர்கள்; கணவன் ஒருநாள் சற்றுத் தாமதமாக வீடு வந்து சேர்ந்தான். வழக்கமாக அவனுக்கு உணவிடும் தாய், அன்று மருமகளை, அதாவது அவன் மனைவியை அழைத்து, 'நீயே அவனுக்கு உணவு பரிமாறு' என்றாள். அவளும் அதை எதிர்பார்த்தவள் போலச் சென்று ஆவலோடு பரிமாறினாள். கணவனும் அவள் முகத்தைப் பார்த்தவாறே, ஆவலோடு அவள் இட்டதை உண்டு தீர்த்தான்.

சற்று நேரம் சென்றபின், தாய் உள்ளே சென்று பார்த்தாள்; அவனுக்கு எடுத்து வைத்த உணவு அப்படியே இருந்ததைக் கண்டாள்; மருமகளிடம் "ஏன் இன்று அவன் உண்ணவில்லை?" எனக் கேட்டாள். அவளும் அங்கு வந்து பார்த்தபின்தான் அவளுக்குத் தன் தவறு புரிந்தது; ஏதோ மறதியாக மாட்டுக்கென ஊற வைத்த பருத்தி விதையும், பிண்ணாக்குநீரும் உணவுக்குப் பக்கத்தில் வைத்திருந்ததை எடுத்து, தான் பரிமாறியிருக்கிறொம் என்பது! கணவனும் ஏதும் கூறாமல், தன்மேலிருந்த காதலால் அதை உண்டு தீர்த்திருக்கிறான்; உணர்வும், சுவையும் தெரியாமல்! "இனியார் என் சொலினும் இன்சொல்லே; இன்னார் கனியும் மொழியும் கடுவே" என்ற குமரகுருபரர் வாக்கு, சொல்லுக்கு மட்டுமன்றிச் செயலுக்கும் பொருந்துமல்லவா!

இனி, இத்ற்கேற்ப ஒரு தலைவனுக்குத் தலைவி முதலில் இனியவளாக இருந்து பின்னர் இன்னாதவளாக மாறிய நிலையை 'மிளைக்கந்தனார்' என்ற புலவர் குறுந்தொகைச் செய்யுளில் (196) கூறியிருப்பதைக் காண்போம்.

பல நாட்கள் தலைவியிடம் பழகிய தலைவன், சில நாட்கள் அவளை மறந்திருந்து, பின்னர் காண வந்தபோது தோழி அவனிடம் கூறுகிறாள்: "ஐயனே! முன்னெல்லாம் என் தோழியாகிய தலைவி பச்சை வேப்பங்காயைத் தந்தால்கூட, 'இனிய வெல்லக்கட்டி' என்று அதனை ஏற்றுக் கொண்டீர்கள்! ஆனால் இப்பொழுதோ?

"பாரி வள்ளலின் பறம்புமலையில் ஏராளமான சுனைகள் உள்ளன. அவற்றின் நீர் எப்பொழுதும் குளிர்ச்சியாகவும், தெளிவாகவும் இருக்கும். பனி மிகுந்த குளிர்காலமாகிய தை மாதத்தில் அதன் குளிர்ச்சிக்குக் கேட்கவே வேண்டாம்! அத்தகைய சுனைநீரை அதன் குளிர்ச்சி மாறாமல் கொடுத்தாலும், 'அது வெப்பமாயிருக்கிறது; உவர்ப்பாயிருக்கிறது' என்று கூறுகிறீர்கள். உங்கள் அன்பின் பகுதி இப்படி வேறுபட்டிருப்பது ஏன்? தலைவியிடம் அன்பு குறைபட்டதனாலா?" என்று கூறினாள்.

இக்கருத்தமைந்த பாடலை இனிக் காண்போம்:

"வேம்பின் பைங்காய் என்தோழி தரினே
தேம்பூங் கட்டி என்றனிர்; இனியே,
பாரி பறம்பின் பனிச்சுனைத் தெண்ணீர்
தை'இத் திங்கள் தண்ணிய தரினும்
'வெய்ய; உவர்க்கும்' என்றனிர்;
ஐய! அற்றால் அன்பின் பாலே"
(குறுந் - 196)

[பைங்காய் - பச்சை மாறாத காய்;
தேம்பூங்கட்டி - இனிய மென்மையான வெல்லக்கட்டி;
தெண்ணீர் - தெளிந்த நீர்;
வெய்ய - வெப்பமுடையன]

No comments:

Post a Comment