ஆடி என்பது கண்ணாடி; பாவை என்பது அக்கண்ணாடிக்குள் தோன்றும் பிம்பம் (அதாவது உருவம்). ஒருவன் முகம் பார்க்கும் கண்ணாடியின் முன்னால் நின்றுகொண்டு சிரித்தல், அழுதல், ஆடுதல் என்றிவ்வாறான சேட்டைகளில் எது செய்தாலும் அக்கண்ணாடிக்குள் தோன்றும் உருவமும் அவற்றையெல்லாம் செய்வதைக் காணலாம். இத்தகைய ஆடிப்பாவையை ஒரு தலைவனுக்கு உவமையாகக் கூறியுள்ளார், ஆலங்குடி வங்கனார் என்னும் புலவர். அது பற்றி இப்போது காணலாம்.
ஒரு தலைவனும் தலைவியும் திருமணம் செய்துகொண்டு இல்லறம் நடத்தி வந்தனர். அவர்களது அன்பிற்கு அடையாளமாக ஒரு மகனும் பிறந்தான். அதன்பின் ஏதோ ஒரு காரணத்தால் அவர்களுடைய இல்லறத்தில் சிறு விரிசல் ஏற்பட்டது. அதன் விளைவாகத் தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்று, ஒரு பரத்தையின் இல்லத்தில் தங்கினான். இதனையறிந்த தலைவி, அப்பரத்தையை இழிவாகப் பேசினாள். தன் கணவனை அவள்தான் தன்னிடமிருந்து பிரித்து வலிய இழுத்துச் சென்றுவிட்டாள் என்று பலரிடமும் கூறிவந்தாள்.
மற்றவர்கள்வாயிலாக அப்பரத்தையும் தலைவி கூறியவற்றைக் கேட்டறிந்தாள். அவள் சும்மா இருப்பாளா? தலைவியிடம் சென்று கூறவேண்டும் என்பதற்காகவே அவளுக்கு வேண்டியவர்கள் கேட்கும்படி அத்தலைவியையும் தலைவனையும் பற்றிப் பின்வருமாறு கூறினாள்:
"வயல்வெளிகளும் நீர்நிலைகளும் நிறைந்த ஊரைச் சேர்ந்தவன் தலைவன். அவ்வூரின் வயலோரமாக உள்ள தோட்டங்களில் மாமரங்கள் நிறைந்துள்ளன.அவற்றில் நன்றாக விளைந்து முற்றிய மாம்பழங்கள் பறிப்பாரின்றித் தானாகவே காற்றினால் உதிர்ந்தன. இனிமையான அப்பழங்களைப் பக்கத்து வயல்களில் மேய்ந்து கொண்டிருந்த பெரிய வாளை மீன்கள் கவ்விக்கொண்டு சென்று சுவைத்தன. இத்தகைய ஊரைச் சேர்ந்த தலைவன் எங்கள் வீட்டிலிருக்கும்போது, தன்னையும் தலைவியையும் பற்றிப் பலவாறாகப் பெருமை பேசுவான்.
"ஆனால், அவள் வீட்டில் நாள்தோறும் நடப்பது என்ன தெரியுமா? அங்கு தலைவன் அவள் விரும்பியபடியெல்லாம் ஆடுவான்! கண்ணாடி முன் நிற்கும் ஒருவன் கையும் காலும் தூக்கி ஆடினால், அதனுள் தோன்றும் உருவமும் அவ்வாறே கை கால்களைத்தூக்கி ஆடுமல்லவா? அதுபோலத்தான் அவனும் மனைவி சொன்னபடியெல்லாம் ஆடினான். இவ்வாறு அவனை ஆட்டிப் படைத்த அவள் என்னைப்பற்றி அவதூறாகப் பேசினாளே? அவனை ஒன்றும் நானே வலியச் சென்று இழுத்து வரவில்லை! அவனாக வந்தான்; நான் சேர்த்துக் கொண்டேன். அவ்வளவுதான். அவன் ஊரில் தானாக முற்றி உதிர்ந்த தோட்டத்து மாங்கனியை வயல்களில் உள்ள வாளைமீன்கள் கவ்விச் செல்வது போலத்தான் இதுவும்!" என்றாள்.
இதனை விளக்கும் குறுந்தொகைச் செய்யுள் இதோ:
"கழனி மாஅத்து விளைந்துகு தீங்கனி
பழன வாளை கதூஉம் ஊரன்
எம்மில் பெருமொழி கூறித் தம்மில்
ஆடிப் பாவை போல
மேவன செய்யும்தன் புதல்வன் தாய்க்கே" (குறு - 6)
[மாஅத்து - மாமரத்தின்;
விளைந்துகு - விளைந்து உதிரும்;
பழனம் - வயல்;
கதூஉம் - கவ்விச் செல்லும்;
மேவன - விரும்பியன]
இச்செய்யுளில் தலைவியைக் குறிக்கும்போது பரத்தை தலைவி என்று கூறப்பிடிக்காமல் 'புதல்வன் தாய்' எனக் கூறுதல் நோக்கத்தக்கது.
Saturday, July 18, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment