முதலாவதாக, குறுந்தொகைச் செய்யுள் (40) ஒன்றைக் காண்போம்:
தலைமகன் ஒருவன் பூஞ்சோலையுள் தலைவியைக் கண்டான். காதலர்கள் சந்திக்கின்ற இடம் பெரும்பாலும் இதுபோன்ற பொது இடங்கள்தானே! ஆனால், இங்கு குறிப்பிடும் காதலர்கள் இதற்கு முன் ஒருபோதும் ஒருவரையொருவர் பார்த்ததில்லை. எனினும் அவளைக் கண்டவுடன் தலைவனது மனம் அவள்பின் சென்றது. மனம் சென்றபின், அவர்கள் கண்ணும் கண்ணும் கலந்தன. கண்ணொடு கண்ணிணை நோக்கு ஒத்தன! அதன்பின் வாய்ச்சொற்கள் பயனில்லை என்றார் வள்ளுவர். ஆயினும், எவ்வளவு நேரம்தான் பார்த்துக்கொண்டே இருக்க முடியும்? மெல்ல மெல்லப் பேசத் தொடங்கினர். அவரவர் பெற்றோர்களைப் பற்றியும் குடும்ப நிலை பற்றியும் பரிமாறிக் கொண்டனர்.
நேரம் சென்றது; தலைவன் மெதுவாகப் பிரிந்து செல்லத் தொடங்கினான். அவன் சென்றால், மீண்டும் வருவானா, மாட்டானா? மறுபடி சந்திக்க முடியுமா? என்ற அச்சம் அவளிடம் உண்டாயிற்று. குறிப்பினால் இதனையுணர்ந்த தலைவன் பேசத் தொடங்கினான்:
"பெண்ணே! என் தாய் யாரோ? உன் தாய் யாரோ? நம்மிருவரின் தந்தைமார்களும் அவ்வாறே! எவ்வகையாலும் தொடர்புடையவர்கள் இல்லை. அது மட்டுமா? நீயும் நானும்தான் எங்கே எப்பொழுது பார்த்திருக்கிறொம்? இதுதானே நம் முதல் சந்திப்பு? ஆனாலும் பார்; உயர்ந்த வானத்திலிருந்து மழை பொழிகிறது. அது பொழியும்போது தூய பளிங்கு போல் நிறமற்றுத்தானிருக்கிறது. இந்தச் செம்மண் தரையில் துளிகள் விழுந்தவுடன், அம்மழைநீரும் செந்நிறமடைந்து விடுகிறதே! நீரின் நிறமும் நிலத்தின் நிறமும் ஒன்றாகி விடுகின்றன! அவை வெவ்வேறிடத்திருந்து வந்து சேர்ந்தபின் ஒன்றாகிவிட்டது போலத்தான் நாமும்! வேறு வேறிடத்திற் பிறந்து வளர்ந்தோம்; இன்று நம்மிடையே உள்ள இந்த அன்பினால், நமது நெஞ்சங்களுமொன்றாகிவிட்டன! எனவே எதற்கும் கவலைப்படாதே" என்றான்.
இனி, பாடலைக் காண்போம்:
"யாயும் ஞாயும் யாரா கியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயனீர்
போலஅன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே"
[ஞாய் - உன் தாய்; நுந்தை - உன் தந்தை; கேளிர் - உறவுமுறையினர்]
இவ்வினிய பாடலை இயற்றிய ஆசிரியர் பெயர் தெரியவில்லை. ஆனால் இப்பாடலைத் தொகுத்த புலவர், 'செம்புலப்பெயல்நீர்போல' என இதில் வரும் உவமை சிறந்த கருத்து மிக்கதாக இருப்பதால், அதனையே "செம்புலப்பெயனீரார்" என இப்பாடலாசிரியர் பெயராகக் குறிப்பிட்டுள்ளார்.
Saturday, July 4, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment