தலைவனும் தலைவியும் களவுக்காலத்தில் பலமுறை தனியிடங்களிற் கூடி மகிழ்வர். ஊர் மக்களில் சிலர் இதனை அறிந்தால் தமக்குள் பலவிடங்களில் சந்தித்துப் பலவாறு பேசுவர். இவ்வாறு சிலரும் பலரும் பேசுவதை 'அம்பல்' என்றும் 'அலர்தூற்றல்' என்றும் கூறுவர்.
தோழி ஒருத்தி தலைவன் பிரிந்து சென்றபின் தலைவி வருந்துவதைக் கண்டாள்; 'அவன் திரும்பிவந்து மணந்து கொள்ளும் வரை, உன்னால் அவன் பிரிவை எப்படித் தாங்கிக்கொள்ள முடியும்?' என்று வினாவினாள். அவளுக்குத் தலைவி கூறிய மறுமொழி இது:-
"சிறிய கடற்காகம் ஒன்று கடல் மீது பறந்து சென்று தன் செவ்வாயின் பேரலகினால் மீனைக் கொத்த முயன்றது. அப்போது எழுந்த பேரலை ஒன்று காக்கையின் மேல் மோதி அதன் முதுகையெல்லாம் ஈரமாக்கியது. நீர்த்திவலைகளால் ஈரமாகிய அக்காக்கை குளிரை வெறுத்து பூக்கள் பல நிறைந்த கரையிலேயே தங்கி விட்டது. இத்தகைய கடற்கரை ஊரைச் சேர்ந்தவன் நம் தலைவன். நம்மைப் பிரிந்த அவன் வராமலிருந்தால், நாம் இழப்பதற்கு நம் இனிய உயிரைத்தவிர வேறென்ன இருக்கிறது நம்மிடம்?நம்முடைய அழகும் நலனும் போன்ற எல்லாம் முன்னமே அவனுடன் சென்றுவிட்டனவே!" என்றாள்.
காக்கையின்மேல் நீர்த்திவலைகள் தெறித்து ஈரமாக்கியது போல, இவ்வூர் மக்கள் தலைவனைப் பழித்து அலர்தூற்றுவர்; ஈரமாகிய காக்கை கரையிலேயே தங்கியதுபோல் அவன் வருந்துணையும் நாம் ஆற்றியிருப்போம். ஆற்ற முடியவில்லையாயினும் நம்மிடம் உயிரைத் தவிர இழப்பதற்கு ஒன்றுமில்லையே! ஆகையால் உயிர் துறப்போம்; என்ற கருத்து இதில் மறைந்திருப்பதை உணரலாம். இதற்குரிய செய்யுள்:
"சிறுவெண் காக்கைச் செவ்வாய்ப் பெருந்தோடு
எறிதிரைத் திவலை ஈர்ம்புறம் நனைப்பப்
பனிபுலந்து உறையும் பல்பூங் கானல்
இருநீர்ச் சேர்ப்பன் நீப்பின் ஒருநம்
இன்னுயி ரல்லது பிறிதொன்று
எவனோ, தோழி! நாமிழப் பதுவே?" (குறு - 334)
இப்பாடலை இயற்றியவர் இளம்பூதனார் என்ற புலவர்.
[பெருந்தோடு - பெரிய அலகு;
ஈர்ம்புறம் - ஈரமான முதுகு;
பனிபுலந்து - குளிரை வெறுத்து;
நீப்பின் - பிரிந்தால்;
எவனோ - எதுவோ (எதுவுமில்லை என்பது கருத்து)]
Saturday, July 25, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment