திருமாலின் கையிலிருக்கும் ஆழிவெண்சங்கை நோக்கிக் "கருப்பூரம் நாறுமோ, கமலப்பூ நாறுமோ, திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ?" என்றெல்லாம் ஆண்டாள் நாச்சியார் கேட்டதாக ஒரு செய்யுள் உண்டு. அதுபோலவே ஒரு தலைவன் வண்டை நோக்கி, "நறியவும் உளவோ, நீயறியும் பூவே?" எனக் கேட்டதாகக் குறுந்தொகையில் இறையனார் பாடிய ஒரு செய்யுள் உண்டு. அதனை இப்பொழுது காண்போம்.
ஒரு தலைவன் தலைவியைக் காணவந்து அவளை நெருங்கினான். அவளோ நாணத்தாலும் அச்சத்தாலும் விலகி நின்றாள். அப்பொழுது அவளைச் சுற்றி ஒரு வண்டு ரீங்காரமிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு, அதனை விரட்டுவதுபோல அவளை அணுகினான். இவ்வாறு வண்டை விரட்டிக்கொண்டே தலைவியை நெருங்கித் தொடுதலை 'வண்டோச்சி மருங்கணைதல்' என்ற துறையாகக் கூறுவர். வண்டை நோக்கிக் கூறுவதுபோல இங்கு தலைவன் தலைவியின் பெருமையைக் கூறுகிறான்.
"வண்டே! நீ அழகான சிறகுகளைக் கொண்டிருக்கிறாய். நாள்தோறும் பூக்கள்தோறும் சென்று தேன் நுகர்வதையே உன் தொழிலாகக் கொண்டிருக்கிறாய். உன்னை ஒன்று கேட்கிறேன். நான் உன்னைப் புகழ்கிறேன் என்பதற்காக என்மேல் விருப்பம் கொள்ளாமல், நீ உண்மையாகக் கண்டு அறிந்ததைச் சொல்!
"இதோ நிற்கிறாளே இந்தப்பெண்! இவள், நான் தன்னோடு பழகியதை மறக்காமல் என்னிடம் நெருங்கிய நட்புக் கொண்டிருக்கிறாள்; மயில் போன்ற அழகும் மென்மையும் கொண்டவள்; முத்துப் போன்ற நெருக்கமாக அமைந்த பற்களை உடையவள்; இவளது கூந்தலில் தோன்றும் நறுமணத்தைப்பார்! நீ தேனெடுப்பதற்காகச் சென்று பார்த்த, உனக்குத் தெரிந்த பூக்களில் இவள் கூந்தலைவிட மிகுந்த மணமுடைய பூக்கள் உண்டோ? எனக்காகவல்லாமல், நீயறிந்த உண்மையைச் சொல்!" என்று கூறுகிறான்.
திருவிளையாடற்புராணமும் தருமிக்குப் பொற்கிழியளித்த படலத்தில் பாண்டியன் தனக்கு உண்டான ஐயத்தைப் போக்குபவர்க்காகப் பரிசு அறிவித்தது; தருமி என்பவன் அதனைப் பெற முயன்றது; அவன் கொடுத்த பாடலில் பொருட்குற்றமுண்டென்று நக்கீரர் வாதாடியது முதலியனவாக விரித்துக் கூறியுள்ளது. 'திருவிளையாடல்' என்ற திரைப்படத்திலும் இந்நிகழ்ச்சிகளை நேயர்கள் பர்த்திருக்கலாம். கூந்தலுக்கு இயற்கையில் மணமில்லை என்பதே நக்கீரர் கண்ட குற்றமாகும். இவற்றுக்கெல்லாம் ஆதாரமாக அமைந்த குறுந்தொகைச் செய்யுள் வருமாறு:
"கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி!
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ!
பயிலியது கெழீ'இய நட்பின் மயிலியல்
செறியெயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ, நீயறியும் பூவே?" (குறுந் - 2)
[கொங்கு - தேன்;
சிறை - சிறகு;
செறியெயிறு - நெருங்கிய பற்கள்;
அரிவை - பெண்;
நறிய - நறுமணமுடையவை]
Monday, July 13, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment