Thursday, September 10, 2009

15. உடன் போக்கு

தலைவி தலைவனுடன் அவனிருப்பிடத்திற்குச் செல்லுதல் என்பது இதன் பொருள். இக்காலத்திலும் சில பெண்கள் தாம் காதலிப்பதை வீட்டிலுள்ளோர் ஏற்காவிட்டால், காதலனுடன் 'ஓடிப் போதல்' உண்டல்லவா? அக்காலத்தில் தலைவி தான் விரும்பும் தலைவனுக்குத் தன்னைப் பெற்றோர் மணமுடிக்க விரும்பாவிட்டால், அல்லது வேறு ஒருவனுக்கு மணம் பேச முனைந்தால், அல்லது ஊரில் அலர் எழுந்தால் (ஊர் மக்கள் பழித்துப் பேச முற்பட்டால்) அல்லது தலைவனே விரும்பினால், அவனுடன் வேற்றூர் சென்று வாழத் துணிவாள். இதனையே உடன்போக்கு என்பர். சில சமயம் தலைவன் உடன்போக்கை விரும்பாமல் காட்டுவழியில் ஏற்படும் துன்பங்களையும், கள்வர்கள் வழிப்பறி செய்யும் தொல்லை பற்றியும் எடுத்துக் கூறித் தடுப்பதுண்டு; தடுத்தாலும் தலைவி உடன் செல்வதையே விரும்புவாள்; அவனைப் பிரிந்து வீட்டிலிருந்து வருந்துவதைக் காட்டிலும், உடன் செல்வதே மேல் என்று எண்ணுவாள்.

அவ்வாறு உடன் செல்லத் துணிந்த ஒரு தலைவியின் உள்ளப்பாங்கை இப்பொழுது காணலாம். "என் மனமே! நீ உடனே புறப்படு; கட்டி என்பான் ஒரு சிற்றூர்த் தலைவன்; அவன் வேலெறிதலில் வல்லவன்; அவனது ஊருக்கு அப்பாலுள்ளது நம் தலைவனது ஊர்; அது குல்லை என்ற ஒருவகைப்பூவைத் தலைமாலையாக அணிந்த வடுகா நாட்டின் எல்லையிலுள்ளது. அங்கெல்லாம் வாழும் மக்கள் வேற்றுமொழி பேசுபவர்கள். இவற்றுக்கெல்லாம் கவலைப்படாமல் உடனே புறப்படு.

நான் அவனுடைய நாட்டுக்குச் சென்று அவனை வழிபட்டு வாழ விரும்புகிறேன். அதனால் உடனே புறப்படு; அவனைப் பிரிந்து வருந்துவதால் என் உடல் மெலிந்து, சங்கினை அறுத்துச் செய்த என் வளையல்கள் கழன்று விழுகின்றன. என் கண்கள் நாள் முழுவதும் உறங்காமல் அழுதுகொண்டே இருக்கின்றன. இவ்வாறு இங்கு வருந்தித் தனித்து வாழ்வதிலிருந்து அவனுடன் செல்வதால் தப்பிப் பிழைக்கலாம்! ஆகையால் நெஞ்சே! உடனே புறப்படு" என்று தன் நெஞ்சிற்குக் கூறுவதுபோல் தோழி கேட்கும்படி தான் உடன்போக்கிற்குத் துணிந்ததைத் தலைவி கூறினாள்.

இதனை விளக்கும் பாடல் மாமூலனார் இயற்றியது:

"கோடுஈர் இலங்குவளை நெகிழ, நாளும்
பாடுஇல கலிழும் கண்ணொடு புலம்பி
ஈங்கிவள் உறைதலும் உய்குவம்; ஆங்கே
எழுஇனி! வாழி!என் நெஞ்சே; முனாஅது
குல்லைக் கண்ணி வடுகர் முனையது
வல்வேற் கட்டி நன்னாட்டு உப்பர்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்
வழிபடல் சூழ்ந்திசின்; அவருடை நாட்டே."

[கோடு - சங்கு; ஈர் - அறுத்துச் செய்த; பாடு இல - மூடுவதில்லாமல் (உறங்காமல்); கலுழும் - கண்ணீர் விடுகின்ற; முனாஅது - முன்னால் உள்ளது; கட்டி - ஒரு சிற்றூர்த் தலைவன்; உம்பர் - அப்பால்; சூழ்ந்திசின் - எண்ணினேன்]

No comments:

Post a Comment