பிரிவின்போது தலைவனை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த தலைவி, அவன் வந்ததும் தன் ஆற்றாமையும், ஆவலும் தீர அவனைக் கூடி மகிழ்ந்தாள். அவளது மகிழ்ச்சியையும், அவனிடம் அவள் எவ்வளவு அன்பு கொண்டிருந்தாள் என்பதையும் விளக்குகிறது இப்பாடல்.
கடற்கரை ஊரைச் சேர்ந்தவன் தலைவன். கடலோரத்தில் தாழை மரங்கள் மிகுதியாக உள்ளன. மகரந்தத் துகளோடு கூடிய அத்தாழையின் பூமடல்கள் அணிலின் பல்போன்று காணப்படுகின்றன; நீலநிற மணிபோன்று கடல்நீர் நீலமாகக் காணப்படுகிறது. இத்தகைய "கடற்கரையின் ஊருக்குத் தலைவனே! எனது இப்பிறவி நீங்கி, மறுபிறப்பு ஒன்று உண்டானாலும் நீயே என் கணவனாக இருக்க வேண்டும்; அதேபோல உன் மனத்துக்குப் பிடித்தமானவளாக நானே வரவேண்டும்" இவ்வாறு தலைவி தன் அன்பு மிகுதியை வெளிப்படுத்தினாள். இதனை இயற்றியவர் அம்மூவனார்.
"அணிற்பல் அன்ன கொங்குமுதிர் முண்டகத்து
மணிக்கேழ் அன்ன மாநீர்ச் சேர்ப்ப!
இம்மை மாறி மறுமை ஆயினும்
நீயாகியர் எம் கணவனை;
யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே!" [குறு - 49]
[கொங்கு - மகரந்தம்;
முண்டகம் - தாழை;
கேழ் - நிறம்;
மாநீர் - கடல்;
ஆகியர் - ஆகுக;
நேர்பவள் - பிடித்தமானவள்]
Subscribe to:
Post Comments (Atom)
நண்பரே எனக்கும் எப்போதும் இலக்கியத்தின் மீது தீராத காதல் உண்டு...
ReplyDeleteஇதனையும் படித்துப் பார்த்து எப்படி இருக்கிறது என்று கூறுங்கள்...
http://iravinpunnagai.blogspot.in/2012/07/2.html
http://iravinpunnagai.blogspot.in/2012/07/blog-post.html