மகத நாட்டையாண்ட மௌரிய வம்சத்தினருக்குத் தலைநகராக விளங்கியது பாடலிபுத்திரநகர். இக்காலத்தில் அது பாட்னா என்றழைக்கப்படுகிறது. அந்நகரைப் பரிசாகப் பெறுக என்பதுதான் இத்தலைப்பு. தலைவனைப் பிரிந்திருந்த ஒரு தலைவியிடம் பாணன் ஒருவன் வந்து அவளது காதலனாகிய தலைவன் வந்துவிட்டான் என்று அறிவித்தான். அதுகேட்டுப் பெருமகிழ்ச்சியடைந்த தலைவி அவனுக்குப் பரிசு வழங்க விரும்புகிறாள்.
"பாணனே! என் காதலரின் வருகையை நீயே நேரில் கண்டாய? அல்லது யாரேனும் கண்டு வந்து கூறியதைக் கேட்டாயா? யாரிடத்திற் கேட்டு அறிந்தாய்? ஒன்றைத் தெளிவாக அறிய விரும்புகிறேன். என்று கேள்விமேல் கேள்வியாக அடுக்கினாள். இந்த நல்ல செய்தியைக் கூறிய அவனுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்பினாள். மகத நாட்டுத் தலைநகராகிய பாடலி, சோணை நதிக்கரையிலுள்ளது; அவ்வாற்றில் வெண்மையான தந்தங்களை உடைய யானைகள் நீராடப் படியும்.அக்காலத்தில் செல்வச் செழிப்புடன் விளங்கியது அந்நகரம். அதனையே அவனுக்குப் பரிசாகத் தர விரும்பிய தலைவி, ஆவல் மேலிட, "சொல், யார் சொல்லக் கேட்டாய் என் காதலர் வரவை? நீ பொன் நிறைந்த பாடலி நகரையே பரிசாகப் பெறுக" எனக் கூறினாள். காதலரின் வரவில் அத்தலைவி எவ்வளவு எதிர்பார்ப்பும் ஆவலும் கொண்டிருந்தாள் என்பதை இப்பாடல் விளக்குகிறது. இதனை இயற்றியவர் படுமரத்து மோசிகீரனார்.
"நீகண் டனையோ? கண்டார்க் கேட்டனையோ?
ஒன்று தெளிய நசையினம்; மொழிமோ!
வெண் கோட்டு யானை சோணை படியும்
பொன் மலி பாடலி பெறீ'இயர்!
யார்வாய்க் கேட்டனை, காதலர் வரவே?" [குறு - 75]
[நசையினம் - விரும்பினோம்;
பெறீ'இயர் - பெறுக]
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment