அகப்பொருளில் களவிலும் சரி; கற்பிலும் சரி, தலைவியைவிடத் தோழிக்குத்தான் முக்கிய பங்கு. தலைவியின் வருத்தத்தைக் கண்டு ஆறுதல் கூறவும், தலைவனுடன் பேசவும், அவர்கள் ஒன்று சேர ஆவன செய்யவும், வீட்டாரிடம் தலைவியின் நிலையை எடுத்துக்கூறித் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யவும், இதுபோன்ற இன்னும் பல செயல்களுக்கும் தோழியின் பங்கு இன்றியமையாதது; அளவிட முடியாதது. இதே போலத் தலைவனுடைய தோழனான பாங்கனுக்கும், தோழியைப்போல அவ்வளவு இல்லாவிட்டாலும், ஓரளவு பங்கு உண்டு. தலைவன் தவறு செய்யும்போது நல்வழிப்படுத்த இடித்துக் கூறவும், அவன் இவனிடம் தன் துயரை வெளிப்படுத்தி ஆறுதல் பெறவும் பாங்கனது துணை தேவைப்படுகிறது.
இப்பொழுது இடித்துக்கூறிய பாங்கனுக்குத் தலைவன் தன் இயலாமையைக் கூறி வருந்தும் ஒரு செய்யுளைக் காண்போம்.
பிரிவுத்துயரத்தால் தலைவி வருந்துவதைப் போலவே, ஒரு தலைவனும் தன் தலைவியைப் பிரிந்து சென்றபின் பெரிதும் வருந்தினான். அவனது துன்பத்தைக் கண்ட பாங்கன், அதற்குக் காரணத்தைக் கேட்டறிந்தான். "ஒரு பெண்ணுக்காக நீ இவ்வாறு வருந்தல் கூடாது. உனது ஆற்றல், தலைமை, தகுதி முதலியவற்றுக்கு நீ இவ்வாறு ஒழுகுதல் தகாது. எனவே, அவளை மறந்துவிட்டு, உன் செயல்களில் கருத்தைச் செலுத்துவதே உன் நற்பண்புக்கு ஏற்றது." எனக் கூறி இடித்து உரைத்தான்.
இதனைக் கேட்ட தலைவன், "என்னை இடித்துக் கூறித் திருத்த முயலும் நண்பனே! நீ கூறியபடி நான் செய்யவில்லை என்பதுதானே உன் மனக்குறை! அப்படிச் செய்யவேண்டும் என்பதுதான் என் விருப்பமும்! ஆனால், அது முடியவில்லையே! கதிரவன் வெயில் நன்றாகக் காய்கின்ற ஒரு பாறை. அதன்மேல் ஓர் இலையில் வெண்ணெய் வைக்கப் பட்டிருக்கிறது. அந்தப் பாறையின் பக்கத்தில் வெண்ணெய்ய்க்குக் காவலாக ஒருவன் அமர்ந்திருக்கிறான். அவன் எத்தகையவன் என்று நினைக்கிறாய்? அவனுக்குக் கைகளும் இல்லை; ஊமையாதலால் வாயும் பேச முடியாது! தன் கண்களால் மட்டுமே பார்த்துக் கொண்டிருக்க முடியும்! வெயில் ஏற ஏறப் பாறையின் சூடு அதிகமாகியது; அதன் மேலிருந்த வெண்ணெயும் உருகி ஓடி வழியத் தொடங்கியது! இந்நிலையில் அதைக் காவல் காப்பவன் என்ன பாடு ப்டுவான் என்பதை எண்ணிப் பார்! அவனால் வெண்ணெய் ஓடுவதைப் பார்த்துக் கொண்டிருக்கத்தான் முடியுமே தவிர, அதனை எடுத்து வேறிடத்தில் வைக்கவோ, யாரையேனும் கூவியழைத்துச் சொல்லவோ முடியுமா? அவன் நிலையில்தான் நானும் இருக்கிறேன்! என் துயரைச் சொல்லவும் முடியாமல், செயல்படவும் முடியாமல் தவிக்கிறேன்! 'நீங்கினால் சுட்டெரிக்கவும், நெருங்கினால் தணியவும் வல்ல தீப் போன்றது காம நோய்' என்று வள்ளுவர் கூறியுள்ள்து போல், என்னிடமும் அந்நோய் பரவியுள்ளது. என்னால் அதனைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை! நான் என்ன செய்வேன்?" என்று பாங்கனுக்குத் தன் இயலாமையை எடுத்துக் கூறினான்.
இச்செய்யுளைப் பாடியவர் வெள்ளிவீதியார் என்ற பெண்பாற்புலவர்.
"இடிக்கும் கேளிர்! நும்குறை யாக
நிறுக்கல் ஆற்றினோ நன்றுமன்; தில்ல;
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்
கையில் ஊமன் கண்ணிற் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று இந்நோய்;நோன்றுகொளற் கரிதே!" (குறு - 58)
[இடிக்கும் கேளிர் - கடிந்து சொல்லும் நண்பன்;
வெவ்வறை - வெப்ப மிகுந்த பாறை;
உணங்கல் - உருகுதல்;
பரந்தன்று - பரவியது;
நோன்றுகொளல் - பொறுத்துக் கொள்ளல்]
இச்செய்யுளின் இரண்டாமடியிறுதியில் மன், தில்ல என இரு இடைச்சொற்கள் உள்ளன. இவற்றில் 'மன்' என்பது 'அது முடியவில்லையே' என்ற கழிவிரக்கப் பொருளையும், 'தில்ல' என்பது 'நீ கூறியவாறு செய்யத்தான் நானும் விரும்புகிறேன்' என்ற விருப்பத்தையும் உணர்த்துகின்றன.
Showing posts with label பாங்கன். Show all posts
Showing posts with label பாங்கன். Show all posts
Saturday, August 15, 2009
Subscribe to:
Posts (Atom)