ஒரு தலைவன் தலைவியைப் பிரிந்து சென்றான். அவன் மீண்டும் வந்து தலைவியைக் காண விரும்பித் தோழியிடம் குறை வேண்டினான். இவ்வாறு தலைவன் வேண்டுதலை 'வாயில் வேண்டல்' என்பர். வாயில் என்பது தூது. தோழி தலைவியிடம் தூதாகச் சென்று தன்குறை முடிக்க வேண்டும் என்பது இதன் கருத்து. இதற்கு அவள் உடன்படவும் செய்யலாம்; மறுக்கவும் செய்யலாம். இங்கு தோழி தலைவியின் கோபத்தை எடுத்துக்கூறி வாயில் மறுத்த செய்தி கூறப்படுகிறது.
"தலைவனே! அழகிய பொய்கைகள் சூழ்ந்த குளிர்ச்சியான் ஊர்தான் எங்கள் ஊர். ஆயினும் கொடிய விஷப்பாம்புகள் திரியும் தெருக்களின் வழியாக எங்களைக் காண வருகிறாய். நீ இரவுப் பொழுதில் இவ்வழியாக வரும் துன்பத்திற்காகவும், பாம்புகளால் உனக்குத் துன்பம் நேருமோ என்று அஞ்சியும், இதுநாள் வரை உனது துன்பத்தை நீக்கி மகிழ்வூட்டினோம்.
"தேன் இனிமையானதுதான். எனினும் அதை அதிகமாகச் சுவைத்தால், சலிப்பேற்பட்டுப் புளிக்கத் தொடங்கிவிடும். அதுபோலவே நீர்நிலைகளில் அதிக நேரம் குளித்துத் துளைந்து ஆடினால், கண்கள் சிவந்து போகும் என்பர். நீயும் அதிக நாட்கள் எங்களுடன் பழகியதால் உனக்குச் சலிப்பேற்பட்டு விட்டதோ? அதன் விளைவாக நீ மீண்டும் எங்களைப் பிரிந்து செல்வதாயிருந்தால் தந்தை இருக்கும் எங்கள் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டுப் பிறகு உனக்கு வேண்டிய இடத்திற்குச் செல்" என்று தோழி கூறினாள்.
இதில் 'கடும் பாம்பு வழங்கும் தெரு' என்றதனால் கொடிய பரத்தையர்கள் வாழும் தெரு அது; அவ்வழியாக நீ வரும்போது அவர்கள் உன்னைக் கவர்ந்து கொள்ளவும் கூடும். எங்கள் மேல் உள்ள சலிப்பினால் நீ அவர்களின் பின்னால் போய்விடுவாய் என்ற குறிப்பு உள்ளது. இனி அப்பாடல்:
"நீர்நீடு ஆடின் கண்ணும் சிவக்கும்;
ஆந்தோர் வாயில் தேனும் புளிக்கும்;
தணந்தனை யாயின் எம்'இல் உய்த்துக் கொடுமோ!
அம்தண் பொய்கை எந்தை எம்மூர்க்
கடும்பாம்பு வழங்கும் தெருவில்
நடுங்கு அஞர் எவ்வம் களைந்த எம்மே" (குறு - 354)
பாடியவர் - கயத்தூர் கிழான்.
[ஆர்ந்தோர் - சுவைத்தோர்;
தணந்தனை - பிரிந்தால்;
அஞர் எவ்வம் - பெருந்துன்பம்;
எம்மே - எங்களை]
Showing posts with label சிவப்பும் புளிப்பும். Show all posts
Showing posts with label சிவப்பும் புளிப்பும். Show all posts
Saturday, August 1, 2009
Subscribe to:
Posts (Atom)